Wednesday 11 June 2014

குறளடிகளார் நினைவஞ்சலி

நல்லா  சிரியர்ப்பேர்  நண்பழனி  மாணிக்கம்
தொல்லா  சிரியர்  தொகைநெறியே – எல்லாம்
தமிழாக  வென்று  தவநீடு  வாழ்க
இமிழ்கடல்  மூழும்  இடம்
                     - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

     ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் கூறும் நல்லுலகம், உலகப் பொது மறையாம் திருக்குறளைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் புரந்து வருகின்றது.

     திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல, பின்பற்றி நடப்பதற்கு என்று உரைப்பார் தமிழ்க் கடல் இரா.இளங்குமரன் அவர்கள்.


உலகம் சீர்பட வேண்டுமாயின் வள்ளுவத்தைத் தவிர மருந்து வேறொன்றுமில்லை என உறுதியாக நம்பி, தன் இறுதி மூச்சு உள்ளவரை, வள்ளுவத்தின் பாதையில், தளராமல் பயணித்தவர் குறளடிகளார் புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்கள்.

..................... நல்லாசிரியரெனத்
திகழும் நல்லோய்  திருக்குறளின்
சீர்சால் நெறியில் ஒழுகி அறம்
அகிலம் பரவப் பரப்பிக்குறள்
அடிகளார்என் றூர்பரவ
திகழும் நல்லோய் ...

எனப், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியராலேயே, புகழப்பட்ட மாணவர் ஒருவர் உண்டென்றால், அவர் குறளடிகளார் ஒருவராகத்தான் இருப்பார்.

     குறளடிகளாரை இவ்வாறுப் போற்றிப் புகழ்ந்தவர் யார் தெரியுமா? அவரது ஆசான், தொல்காப்பியப் பேரறிஞர் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்தான்.

     குறளடிகளார் மொ.பழனிமாணிக்கம் அவர்கள் 10.4.1932 இல், தஞ்சையில் உள்ள தென்னங்குடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியில், தனித் தமிழ் பயின்று 1952 இல் வித்துவான் பட்டம் பெற்றவர்.

     பெரும்புலவர் சித்தரக்குடி நா.இராமநாதன், தொல்காப்பியப் பேரறிஞர்களான பாவலர் ச.பாலசுந்தரம், கூகையூர் கு.அடிகளாசிரியர், முதலான பேராசிரியப் பெருமக்களிடம் பயின்ற பெருமைக்கு உரியவர்.

     இன்று உலகறிந்த அறிஞர்களாக விளங்குகின்ற புலவர் அறிவொளி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் கரந்தையில், ஒரே வகுப்பில் பயின்றவர்.

      வள்ளுவனையும், தந்தைப் பெரியாரையும் தம்மிரு கண்னெனப் போற்றியவர் இவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாங்கினை நெஞ்சில் நிறுத்தி, பெரியார் காட்டிய வழியில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மறவர் இவர்.

     புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, காலந்தவறாமை இவை மூன்றும் இவர்தம் மூச்சு உள்ளவரை கடைபிடித்தக் கொள்கைகளாகும்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்தியெட்டு ஆண்டுகள் தமிழாசிரியராய் தகையாயப் பணியாற்றியவர். எப்பள்ளியில் பணியாற்றினாலும், அப்பள்ளியில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி போற்றிப் புரந்தவர்.

     வழிவழி நாவலர், வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி, தித்திக்கும் முத்துக்கள் இவை மூன்றும் குறளடிகளாரின் எழுத்தில் மலர்ந்த நூல்களாகும்.

     ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின், திருக்குறள் பேரவையின் செயலாளராக 32 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றிய தீரர் இவர்.

பழனி  மாணிக்கப்  பைந்தமிழ்  ஆசான்
கழனி  போன்றவன்  களித்தமிழ் மொழிக்கு
மாமழை  போன்றவன்  மாணவப்  பயிர்க்கு
தாமரை  ஒத்தவன்  தனித்தமிழ் மதிக்கு
                                  - பெருஞ்சித்திரனார்

     குறளையே சுவாசித்து, குறளையே போதித்து வாழ்ந்த குறடிகளார் அவர்கள், தனது 73 ஆம் அகவையில், 16.6.2005 அன்று, தனது மண்ணுலக வாழ்வை நிறைவு செய்தார்.


தொண்டருள் தொண்டர், தலைவருள் தலைவர்,
ஆய்வருள் ஆய்வர்
துணிவருள் துணிவர், பணிவருள் பணிவர்,
பன்முக மாண்பர் பழனிமாணிக்கர்
பலர்புகழ் மாணிக்கர்,
காலந்தவறா கடைப்பிடியாகும், கண்டிப்பில் கண்டிப்பும்
ஆகும் கனிவில் கனிவும் ஆகும்
இப்படி ஒருவரைக் காண இயலுமா?
காண வாழ்ந்தாரே, வாழியர் அவர்
                  - தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்

------

நல்லாசிரியர், குறளடிகளார், குறள் நெறிச் சீலர்
புலவர் திரு மொ.பழனி மாணிக்கம் அவர்களின்
9 ஆம் ஆண்டு
நினைவஞ்சலிச் சிறப்புக் கூட்டம்
16.4.2014 திங்கட் கிழமை
தஞ்சை பெசண்ட் அரங்கில்
நடைபெற உள்ளது.

குறளடிகளாரின்
நினைவினைப் போற்றுவோம்
வாருங்கள்